Easy Tutorial
For Competitive Exams

இலக்கியம் திருக்குறள் ஒழுக்கமுடைமை

ஒழுக்கமுடைமை

* பால்: அறத்துப்பால்.
* இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: ஒழுக்கமுடைமை.


குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம் :
ஒழுக்கம், ஒருவர்க்கு சிறப்பைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கத்தை, உயிரை விட மேலானதாக போற்றிக் காக்க வேண்டும்.


குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
விளக்கம் :
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து தெளிந்தாலும், ஒழுக்கமே வாழ்க்கையில் துணை என்பது விளங்கும்.


குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
விளக்கம் :
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுகிறவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.


குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
விளக்கம் :
பார்ப்பனன் தான் கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால், அவன் பிறப்புக்கு ஏற்ற ஒழுக்கத்திலிருந்து தவறினால் அவனது குலமும், வாழ்வும் கெடும்.


குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
விளக்கம் :
பொறாமை குணம் உடையவனிடம் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு என்பதும் இல்லை.


குறள் 136:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம் :
ஒழுக்கம் தவறுதலால் குலத்தாழ்வு உண்டாகும் என அறிந்த மனவலிமை உடைய சான்றோர்கள், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.


குறள் 137:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
விளக்கம் :
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் தவறினால் வேண்டாத பழியை அடைவர்.


குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம் :
நல்லொழுக்கம், வாழ்வின் நன்மைக்கு விதையாக அமையும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.


குறள் 139:
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
விளக்கம் :
தீய சொற்களை தவறியும்கூடத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.


குறள் 140:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
விளக்கம் :
உலகத்தார் ஏற்றுக் கொண்ட ஒழுக்கப் பண்போடு பொருந்தி வாழக் கற்காதவர்கள், பல நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே ஆவர்.

Share with Friends