Easy Tutorial
For Competitive Exams

இலக்கியம் திருக்குறள் செய்நன்றி அறிதல்

செய்நன்றி அறிதல்

* குறள் பால்: அறத்துப்பால்.
* குறள் இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்


குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்:
தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ் வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.


குறள் 102:
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
விளக்கம்:
காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.


குறள் 103:
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
விளக்கம்:
பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும்விட அளவினால் மிகப் பெரியதாகும்.


குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.
விளக்கம்:
உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.


குறள் 105:
உதவி வரைந்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
விளக்கம்:
உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று: அது உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.


குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு.
விளக்கம்:
மனமாக இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது. துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.


குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
விளக்கம்:
தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழு பிறப்பிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் நன்றியுடையோர்.


குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம்:
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது. நன்மை அல்லாத விஷயங்களை அன்றைக்கே மறந்து விடுவது நல்லதாகும்.


குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
விளக்கம்:
ஒருவர் நம்மைக் கொன்றாற்போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.


குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
விளக்கம்:
எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

Share with Friends